Sunday, February 07, 2016

ஊதாக் கலரு ரிப்பன்

நள்ளிரவில் கைபேசியில் சங்க இலக்கியங்களை tamilvu.org தளத்தில் படித்துக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது அந்தக் கவிதை. படிக்கப் படிக்க ஒரே ஆச்சரியம், மகிழ்ச்சி. எதையோ தேடும் போது எதுவோ கண்ணில் பட்டது போல. அந்தக் கவிதை போன்றே ஒரு திரைப் பாடல் இரண்டு வருடங்களுக்கு முன் பட்டி தொட்டியெங்கும் சக்கைப் போடு போட்டது. இதெல்லாம் ஒரு பாட்டா என்று திட்டிக் கொண்டே கேட்ட  பாட்டு. காலை எழுந்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கினேன்.

அதிகாலையில் மனைவியை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்துவிட்டு, காய்கறி வாங்கி, பிள்ளைகளை எழுப்பும் போதெல்லாம் மனதில் அகநானூறு பாடல் எண் 8 ஓடிக் கொண்டிருந்தது.

வேலைகளை முடித்துவிட்டு கணிணியில் பார்த்தால் அகம்.8 வேறு பாடல். நான் பார்த்த பாடல் இல்லை. சொல் தேடல் மூலம் தேடிப் பார்த்தாலும் நான் பார்த்த பாடல் அகநானூறிலேயே இல்லை என்றது. ஒருவேளை புறநானூறா? அதிலும் இல்லை. பாடல் வரிகள் மனதில் இருந்தன. ஆனால் பாடல் கண்ணில் படவில்லை. உ.வே.சா. போல் தேடி அலைந்து திரிய வேண்டுமா?

முனைவர்.ப.பாண்டியராஜா அவர்கள் உருவாக்கியுள்ள சங்க இலக்கியத் தொடரடைவுகள் (Concordance List) கைகொடுத்தது. நான் ஒரு சொல்லைத் தவறாக ஞாபகம் வைத்திருந்ததால் அதிலும் சற்று நேரமெடுத்தது.  இறுதியாகக் கண்டுபிடித்தேன். அது நற்றிணை பாடல் 8. இரவு தூக்கக் கலக்கத்தில் எப்படியோ அகநானூற்றுக்கு நடுவே இந்தப் பாடலை எப்படியோ படித்திருக்கிறேன்.

அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
   
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
   
திரு மணி புரையும் மேனி மடவோள்
   
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!
   
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5
   
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
   
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்
   
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
   
திண் தேர்ப் பொறையன் தொண்டி-
   
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே!

உரை: மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தக் கூடிய செவ்வரி பரந்த குளிர்ந்த கண்களும், பல்வேறு பூக்களால் தொடுக்கப்பட்ட தழையை உடையாக அணிந்த இடையும், நீலமணியைப் போல் மேனியும் உடைய இந்த இளமகள் யார் புதல்வியோ? அசையாத உள்ளம் கொண்ட என்னையே துன்புறுத்துகிறாள். இவள் தந்தை நெடுங்காலம் வாழ்க. அகன்ற வயலில் உழவர்களால் கதிர் அறுக்கப்பட்டு சேற்றுடன் கொண்டு வரப்படும் நெற் போரிலும் நெய்தல் பூ பூக்கும் வளமுடைய் சேர மன்னனின் தொண்டி நகரம் போல் எல்லா வளமும் பெற்று வாழட்டும் இவள் தாய்.

என் மகளிடம் உரையைக் கூறி எந்தப் பாடல் ஞாபகத்துக்கு வருகிறது என்றேன். வாய் கொள்ளா சிரிப்புடன் அவளும்

 ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
 ஏ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்
 ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
 ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்
 நான் நினைத்த பாட்டையே கூறினாள். 

2 comments:

Mary Lavanya said...

Wonderful.

Unknown said...

சபாஷ் இது உங்களுக்கு..